Friday 19 November 2021

ஜோதிட நுணுக்கங்கள் வலைமனை

வாசக அன்பர்களுக்கு வணக்கம்.


எனது பதிவுகளை புதிய எனது வலைமனையில் (Website) தொடர்ந்து படிக்க    இங்கு சொடுக்கவும் 

என்றும் உங்களுடன்,

உங்கள் அன்பன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: 8300124501

Wednesday 10 November 2021

உறவுகளை கையாள கற்றுக்கொள்ளுங்கள்!

 வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:

எட்டு வருடங்களுக்கு முன் 2௦13 ஆம் ஆண்டு துவங்கிய எனது வலைப்பூ பயணத்தின் மற்றொரு மைல் கல்லாக,  jothidanunukkankal.blogspot.com என்ற நமது வலைப்பூவானது   https://jothidanunukkangal.com/     என்று வலைமனையாக மாறி மேலும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் உங்களுக்கு சேவை செய்ய வருகிறது. எனது அடுத்த பதிவு நமது புதிய https://jothidanunukkangal.com/ என்ற வலைமனையில் வெளிவரும். வாசக அன்பர்கள் தங்களது மேலான ஆதரவை தொடர்ந்து நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.




மனிதன் தனது மகிழ்ச்சியையும், சிரமத்தையும் பகிர்ந்துகொள்ள சக மனிதர்களை நாடுகிறான். நமது குடும்ப உறவுகளோடு நாம் ஏற்படுத்திக்கொள்ளும் நட்புகளும், தொடர்புகளும் ஒருவகை உறவுகளே. இத்தகைய உறவுகள் மூலமே ஒருவர் தான் வாழும் சமூகத்தோடு ஒருங்கினைகிறார். ஒருவருக்கு அமையும் உறவுகள் அனைத்தும் அவருக்கு மன நிறைவாக அமைகிறதா? எனில், அப்படி அல்ல. ஒருவருக்கு ஜாதகத்தில் லக்னத்தோடு தொடர்புகொள்ளும் கிரகத்தின் காரக உறவுகள் ஜாதகரைவிட்டு பெரும்பாலும் விலகுவதில்லை. லக்னத்தோடு தொடர்பற்ற கிரகங்களின் காரக உறவுகள் அவற்றின் தசா-புக்திகளில் மட்டும் ஒருவரின் வாழ்க்கை வட்டத்திற்குள் வந்து அதன் தசை முடிந்த பிறகு விலகிச் சென்றுவிடும்.

கோட்சார கிரகங்கள் ஜனன கால கிரகங்களோடு தொடர்புகொள்கையில் ஜனன கால கிரக காரக உறவிற்கு அந்த குறிப்பிட்ட கோட்சார காலங்களில் மட்டும் குண மாற்றத்தை தருகின்றன. கோட்சார மாத கிரகங்கள் ஜனன கால கிரகங்களின்மேல்  ஏற்படுத்தும் தாக்கத்தைவிட, வருட கிரகங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் வருடம் முழுமையிலும் நீடிக்கும் என்பதால் அத்தகைய குரு, சனி, ராகு-கேதுக்களின் தாக்கம் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் தசா-புக்திகள் ஒரு கிரகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் அதன் தசா-புக்தி காலம் முடியும் வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய பதிவில் கோட்சார வருட கிரகங்கள் கிரக காரக உறவுகள் மீது ஏற்படுத்தும் குண மாற்றத்தை மட்டும் சில உதாரணங்கள் மூலம் ஆராய்வோம்.      

கோட்சார வருட கிரகங்களால் குண மாறுதலை சந்திக்கும் உறவுகள். 


மேற்கண்ட ஜாதகம் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணினுடையது. சர்ப்ப தோஷம் உள்ள இந்த ஜாதகத்தில் களத்திர பாவத்திலிருக்கும் ராகு, புத்திர பாவத்திலில் நிற்கும் களத்திர பாவாதிபதி சனியைத்தான்  முதலில் தொடும். அதுபோல லக்னத்தில் நிற்கும் கேது, முதலில் தொடுவது களத்திர காரகன் செவ்வாயைத்தான். இது ஜாதகி திருமணம் செய்து கரு உருவானதும் கணவன்-மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதை குறிக்கிறது. இவர் 2௦18 ல் திருமணம் செய்துகொண்டவர். திருமணம் செய்து ஓராண்டிற்குப் பிறகு கோட்சார குரு 5 ஆம் பாவத்திற்கு தனுசுவிற்கு வந்தபோது ஜாதகி கருத்தரித்தார். அப்போது கோட்சார  கேது ஜனன கால 7 ஆமதிபதி சனி மீதும், கோட்சார ராகு ஜனன கால களத்திர காரகன் செவ்வாயின் மீதும் நிற்கிறது. கோட்சார ராகு-கேதுக்களால் களத்திர கிரகங்களும் புத்திர பாவமும் கோட்சார குருவும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. கேது புத்திர பாவத்தை கெடுக்க, ராகு கணவனை குறிக்கும் செவ்வாயை கெடுக்க கருத்தரித்த நாள் முதல் தம்பதியருக்குள் சண்டை வந்தது. அருமைக்காதலனே ஜாதகிக்கு அந்நியனாக தெரிந்தார். கோட்சார ராகு கேதுக்கள் தனுசு மிதுனத்தை கடந்ததும் கணவரின் குணத்தில் மாற்றம் இருக்கும் என்றும் அதுவரை ஜாதகி பொறுமையாக இருந்து குழந்தையை பெற்றெடுக்குமாறும் ஆலோசனை கூறப்பட்டது. கோட்சாரத்தில் ராகு ஜனன செவ்வாயை கடந்ததும் கணவரின் குணம் மாறியது. ஜாதகியின் பொறுமையால் கணவனை விட்டுத்தராமல் தனது குடும்ப வாழ்வையும் குழந்தையையும் தக்கவைத்துக்கொண்டார்.

உறவுகளை இணைக்கும் கோட்சார - ஜனன கால கிரக இணைவுகள்.


ஜாதகி காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒரு பெண். விருட்சிக லக்னத்திற்கு சந்திரன் பாதகாதிபதியாகிறார். தாய் மற்றும் மாமியாரை குறிக்கும் சந்திரன் உச்சமும் மூலதிரிகோணமும் பெற்று வலுவாக உள்ளார். பாதகாதிபதி வலுவானதால் இந்த ஜாதகி காதலித்து திருமணம் செய்துகொண்ட தங்களை மாமியார் பிரித்துவிடுவாரோ என்ற பயம் திருமணமான நாள் முதல் இருந்து வந்தது. இதனால் இவர் கணவரின் வீட்டிற்கு வர மறுத்து வந்தார். ராகு-கேதுக்கள் மோட்ச & ஞான காரக கிரகங்களாக வருவதால் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுபவர்களுக்கு உதவி புரியும் குணம் கொண்டவை. இதனடிப்படையில் இந்த ஜாதகியின் கிரக சூழ்நிலைகளை சுட்டிக்காட்டி, மாமியார் வீட்டிற்கு ஜாதகி வரவேண்டுமெனில் மாமியாரை தீவிர பக்தி மார்க்கத்தில் ஈடுபடும்படி அறிவுறுத்தப்பட்டது. ராகு கேதுக்கள் கிரகஹண தோஷத்தை ஏற்படுத்தி சூரிய சந்திரர்களை அடைக்கிவிடும் வல்லமை படைத்தவை. இதனால் தற்போது ஜனன கால சந்திரன் மீது நிற்கும் கோட்சார ராகு ஜாதகிக்கு ஜனன கால சந்திரனால் ஏற்பட்ட மன பயத்தை நீக்கி தெளிவை தந்தார். தற்போது மாமியாருடன் நெருக்கமான உறவை பேணுகிறார்.

பரிவர்த்தனை கிரக காரக உறவுகள் கோட்சாரத்தில் பெறும் குண மாறுதல்கள்.   


ஜாதகர் ஒரு ஆண். சகோதர காரகன் செவ்வாய் இளைய சகோதரத்தை குறிக்கும் 3 ஆம் பாவத்தில் லக்ன பாதகாதிபதி சனியோடு இணைந்து நிற்கிறது. செவ்வாய் 3 ஆம் பாவத்தில் நீசம் பெற்று அதன் அதிபதி சந்திரனோடு நீச பரிவர்த்தனை ஆகியுள்ளது. நீச கிரகங்கள் பரிவர்தனைக்குப்பிறகு ஆட்சி கிரகங்களாக மாற்றிவிடுவதால் பரிவர்த்தனைகளில் நீச கிரக பரிவர்த்தனை மிக விரும்பப்படுகிறது. பரிவர்த்தனை என்பதே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் மாறி செல்வதே. எனவே இட மாற்றத்தால்தான் நற்பலன் ஏற்படும். இல்லையேல் பரிவர்த்தனை பலனளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜாதகருக்கும் இவரது தம்பிக்கும் நல்ல புரிதல் உண்டு. செவ்வாய் கடகத்தில் இருப்பதால் இவரது தம்பி வெளிநாட்டில் பணி புரிகிறார். தற்போது ஜாதகரது தம்பி கொரானாவின் பொருட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார். இவரது தம்பி சொந்த ஊர் திரும்பியது முதல் ஜாதகருக்கும் தம்பிக்கும் உறவு பாதிப்படைந்ததாக ஜாதகர் கூறுகிறார். காரணம், தம்பி வெளிநாட்டில் இருக்கும் வரை பரிவர்த்தனை சிறப்பாக செயல்பட்டுள்ளது. தற்போது தம்பி தாய்நாடு திரும்பிவிட்டதால் பரிவர்த்தனை செயல் இழந்துவிட்டது. கோட்சாரத்தில்தான் பரிவர்த்தனை செயல்படும், தசா-புக்திகளில் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் கோட்சார கேது விருட்சிகத்திற்கு வந்தவுடன் பரிவர்த்தனை செவ்வாய் கேதுவால் ஏற்படும் தாக்கத்தை சந்திரனுக்குப்பதில் தான் வாங்கிக்கொள்கிறார். இதனால் தம்பியின் குணம் மாறுதலடைகிறது. தற்போது  வெளிநாட்டில் இருக்கும் வரை தன்னை மிகவும் நேசித்த தம்பி தற்போது மதிப்பதில்லை என ஜாதகர் கூறுகிறார்.

நண்பனை எதிரியாக்கும் கோட்சாரம்


நண்பர்களை குறிக்கும் காரக கிரகம் புதனாகும். காரக பாவம் 7 ஆமிடமாகும். 7, 1௦ க்கு உரியவராக குருவே இந்த மிதுன லக்னத்திற்கு அமைகிறார். புதன் விரைய பாவத்தில் அமைந்து,  கேதுவோடு இணைந்து தொழில் பாவமான 1௦ ஆவது பாவத்தை நேர்பார்வை செய்யும் குருவின் 9 ஆவது பார்வையை பெறுகிறார். இதன் பொருள், ஜாதகர் நண்பரோடு  இணைந்து தொழில் செய்வார் என்பதும், பிறகு அவரால் விரையத்தை சந்திப்பார் என்பதுமாகும். ஜாதகருக்கும் அவரது நண்பரும் தங்கக்கட்டிகளை மொத்தமாக கொள்முதல் செய்து அதை நகைக்கடைகளுக்கு விற்று வந்தனர். ஒரு கிரகம் அதன் ஆதிக்க காலம் வரும் வரை தனது செயல்களை வழங்க காத்திருக்கும் என்றபடி ஜாதகருக்கு நண்பரை குறிக்கும் புதன் திசை துவங்கியதும், நண்பரை குறிக்கும் 7 ஆமதிபதி குரு கோட்சாரத்தில் லக்னத்திற்கு 6 ல் விருட்சிகத்திற்கு வந்து அங்குள்ள லக்ன எதிரியான செவ்வாயோடு இணைகிறார். இதனால் நண்பனே எதிரியாகிறான். நண்பர், ஜாதகருக்கு 5௦ லட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை மோசடி செய்துவிட்டு தப்பிவிட்டார். இதனால் ஜாதகர் கடனாளி ஆனார்.

கோட்சார கிரகங்களின் செயல்களை கவனித்து அதற்கேற்ப நமது தொடர்புகளை கையாளப் பழகிவிட்டால், அதன்பிறகு நமக்கு நட்பிற்கும் பகைக்கும் வேறுபாடு தெரியாத ஒரு சமநிலை மனிதர்களாக மாறிவிடுவோம்.  


அடுத்த பதிவில் வலைமனையில் சந்திப்போம்,

என்றும் அன்புடன் உங்கள்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Sunday 31 October 2021

முயல் - ஆமை திருமண உறவுகள்.

 

கனவண் மனைவி அன்யோன்யத்தை ஆண்டான்-அடிமை பாவம், காதலன்-காதலி பாவம், குரு-சிஷ்ய பாவம், நாயகன்-நாயகி பாவம், இறைவன்-பக்தன் பாவம், நண்பர்கள் பாவம், நட்பு-எதிரி பாவம் என பல வகையில் வரையறைப்படுத்துவர். இதில் நாயகன் – நாயகி பாவமே உன்னதமானது. அது சம வலுக்கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் இணைவதை குறிப்பிடுகிறது. ஒரு ஜாதகரின் தன்மைகள் அவரது வாழ்க்கை முழுவதும் ஒரே சீரான அளவில் இருப்பதில்லை. அவரவர் ஜாதக திசா-புக்திகளுக்கேற்ப அது மாறிக்கொண்டே இருக்கும். திருமணத்தின்போது காதலர்களாக இணையும் இருவர், சில ஆண்டுகள் கழித்து இறைவன்-பக்தன் நிலையை அடைவதோ அல்லது ஒருவருக்கொருவர் எதிரிகளாக மாறுவதோ அவரவர் ஜாதக திசா-புக்தி அமைப்பை பொறுத்தே அமையும். சில திசா புக்திகள் சாமான்யமானவர்களையும் சாமர்தியசாளிகளாக மாற்றிவிடும். சில, புத்திசாலிகளையும் கோமாளிகளாக மாற்றிவிடும். இதனடிப்படையில் சொல்லப்படும் ஒரு கருத்து “எத்தனை புத்திசாலி ஆணும் ஒரு பெண்ணிடம் முட்டாளாகிறான்; எத்தனை முட்டாளான பெண்ணும் ஒரு ஆண் அவள் வாழ்க்கையில் வந்த பிறகு புத்திசாலி ஆகிறாள்”.

இன்றைய பதிவில், இப்படி மாறிக்கொண்டிருக்கும் செயல்பாடுகளைக்கொண்ட மனித வாழ்வில் அதிகம் பாதிக்கக்கூடிய சந்திரன் மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களின் ஆதிக்க காலத்தில் கணவன்-மனைவி உறவில் ஏற்படுத்தும் விழைவுகளை ஆராயவிருக்கிறோம்.

கீழே ஒரு தம்பதியின் ஜாதகம்.

கணவரின் 7 ஆமதிபதி செவ்வாய் ஜாதகரின் துலாம் லக்னத்திலேயே உள்ளதால், இவர் மனைவியை எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்.  ஆனால் 7 ஆமதிபதி செவ்வாய் 7 ன் பாதகாதிபதி சனியோடு இணைந்துள்ளார். இதனால் மனைவியோடு இணக்கமாக ஜாதகர் இருக்க நினைத்தாலும் ஜாதக கர்மா அதை தடுக்கிறது என்று பொருள். 7 ன் பாதகாதிபதி சனி என்பதால் அது தம்பதியரின் இணக்கம், சனி குறிக்கும் ஜீவனம் தொடர்பால்தான் பாதிப்புக்கு உள்ளாகும்.  சனியும் செவ்வாயும் வக்கிர கதியில் உள்ளன. இதனால் ஜீவன தொடர்பான விஷயங்களிலும், மனைவி தொடர்பான விஷயங்களிலும் ஜாதகர் ஒரு தனித்த நிலைப்பாட்டைக்கொண்டிருப்பார். அந்நிலைப்பாட்டை ஜாதகர் மாற்றிக்கொள்வது மிகக்கடினம். கணவருக்கு திருமண காலம் முதலே சனி திசை நடக்கிறது. சனி ஜீவன கிரகம் என்பதோடு, அது பாதித்துறவு பூண்ட கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது. கணவர் ஜாதகத்தில் உள்ள இந்த அமைப்பே இவர் மனைவியோடு ஒன்றுவதற்கு தடையாகவும் இருக்கும். கணவர் ஜாதகத்தில் மனம், உடல் காரகன் சந்திரனோடு சோம்பல் காரகன் சனி இணைவதால் ஏற்படும் புனர்பூ தோஷம் ஜாதகருக்கு உடல் ரீதியாக சோம்பலை ஏற்படுத்தும். புனர்பூ தோஷம் ஜாதகரின் மனோ வேகமும் செயல் வேகமும் ஒருங்கினையாத தன்மையை ஏற்படுத்தும். சனி, சந்திரன் தசா-புக்திகளில்தான்  இதன் வெளிப்பாடு அதிகம் இருக்கும்.. ஜாதகர் தற்போது சனி தசையில் உள்ளார்.  

மனைவி ஜாதகத்தில் ரிஷப லக்னத்தை குரு தனது சுபப்பார்வையால் புனிதப்பாடுதுகிறார். 7 ஆமதிபதி செவ்வாய் கேந்திர வலுப்பெற்று 7 ஆமிடத்தை தனது 4 ஆம் பார்வையால் வலுவாக்குகிறார். 7 ஆமதி செவ்வாயையும் 7 ஆமிடத்தையும் செவ்வாயின் பகை கிரகமான சனி வக்கிரம் பெற்று பார்க்கிறார். இது, கணவர் சோம்பல்தன்மை உடையவர், ஜீவன விஷயங்களில் குறிப்பிட்ட மாற்ற இயலாத எண்ணங்களைக் கொண்டிருப்பவர் என்பனவற்றை குறிக்கிறது. இந்த ஜாதகத்தில் 1-7 ல் ராகு-கேதுக்கள் அமைந்து சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய அமைப்புகள் இந்த ஜாதகி துணைவர் வகையில் சிரமங்களை எதிர்கொள்வார் என்பதை குறிக்கிறது. ஜாதகிக்கு தற்போது சந்திர தசை நடக்கிறது. உணர்ச்சிகளுக்குரிய சந்திரன் அனைத்து கிரகங்களையும்விட விரைவாக சுற்றுபவர். சந்திரன் தனது தசையில் ஜாதகிக்கு செயல் வேகத்தையும் ஆசா-பாசங்ககளையும் தருகிறார்.

கணவர் ஜாதகத்தில் நடக்கும் சனி தசை ஜாதகரை முடக்கி வைத்து அவரை குடும்ப வாழ்வை விட்டு விலக்குகிறது. மனைவி ஜாதகம் அதற்கு நேர்மாறாக உயிர்த்துடிப்புடன் வாழத்தூண்டுகிறது. மனைவியின் செயல் வேகங்களுக்கு கணவரால் ஈடுகொடுக்க இயலவில்லை. அதனால் தனது குறைகளை மறைக்க, வேலைச்சூழலை காரணம் காட்டி மனைவியை இந்தியாவில் விட்டுவிட்டு ஜாதகர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். சனி தசையில்தான் கணவருக்கு திருமணம் நடந்தது. ஆனால் மனைவி வந்த பிறகே தனக்கு மனைவி மீது நாட்டம் இல்லை என்கிறார்.. அதுவரை இல்லற நாட்டம் இருந்தது என கணவர் கூறினார். இவர்களுக்கு குறிப்பாக கணவருக்கு உளவியல் சிகிச்சை தேவைப்படும்.   

இரண்டாவது தம்பதியரின் ஜாதகம் கீழே.

விருட்சிக லக்னதிற்குரிய கணவர் ஜாதகத்தில் கடந்த ஆண்டு முதல் சனி தசை நடக்கிறது. சனி லக்னத்திற்கு 8 ஆமிடத்தில் அமைந்துள்ளார். சனிக்கு 8 ஆமிட தோஷம் இல்லை எனினும், தனது காரகம், தொடர்புகொண்ட பாவங்கள் வகையில் ஜாதகர் மேல் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனலாம். சனி 8 ஆமிடத்தில் நின்று 1௦, 2, 5 ஆம் பாவத்தை பார்ப்பதால் தனது காரகம் சார்ந்த தொழில், வருமானம், குடும்பம், குழந்தைகள் ஆகிய வகைகளில் தடை, தாமதங்களை ஏற்படுத்துவார். அதே சமயம் ஜாதகருக்கு தத்தி எண்ணுமளவு நிதானம், தெளிந்த  நேர்மை, கட்டுப்பெட்டித்தனம் ஆகியவற்றையும் கொடுப்பார். லக்னாதிபதி செவ்வாய்க்கு 7 ஆமதிபதி சுக்கிரன் விரையத்தில் சிம்மத்தில் நின்று சனி, குரு ஆகிய இரு கிரகங்களின் பார்வையையும் பெறுகிறார். செவ்வாய்க்கு 12 ல் சுக்கிரன் நிற்பதால் ஜாதகர் மனைவியை பிரிகிறார். சனி சுக்கிரனை பார்ப்பதால் மனைவியை வேலை நிமித்தமாக பிரிகிறார். சுக்கிரனை குருவும் பார்க்கிறார். தசாநாதன் சனி குரு சாரம். இந்த அமைப்பால் ஜாதக்கரின் மனைவி வெளிநாட்டு வேலைக்கு சென்றுள்ள நிலையில் மனைவியை பிரிந்துள்ளார்.  

மனைவி ஜாதகப்படி சந்திர தசை நடக்கிறது. வெளி நாடு செல்வதை குறிக்கும் முதன்மை பயண காரக கிரகம் சந்திரன், சனியின் வீட்டில் நின்று லக்னத்தையே பார்ப்பதால் ஜாதகி வேலை தொடர்பாக வெளிநாடு செல்கிறார். சந்திரன் விரைவான செயல் வேகமுடைய கிரகம் என்பதால் மனைவி துணிந்து குடும்பத்தை பிரிந்து வெளிநாடு செல்கிறார். கணவர் ஜாதகத்தில் மெதுவான செயல்பாடுகொண்ட சனி தசை நடப்பதால் அவர் மனைவியின் பணிக்கு வாய்ப்பு விட்டு விலகி நிற்கிறார். கணவர் ஜாதகத்தில் 1-7 ல் நிற்கும் ராகு-கேதுக்களால் ஏற்படும் சர்ப்ப தோஷம் அதற்கு அனுமதிக்கிறது.

இருவரும் முயலும் ஆமையும் திருமணம் செய்துகொண்டதைப்போல தற்போது உணர்கிறார்கள். துள்ளி ஓடும் முயலோடு ஒப்பிடுகையில், ஆமையின் வேகம் மிகக்குறைவு. சந்திரனும் சனியுமே இந்த ஆமையும் முயலும் எனலாம். இவர்கள் இருவரும் ஒரே வேகத்தில் வாழ்வில் இணைந்து செல்ல இயலாது. இங்கு கணவர் மனைவிக்காக விட்டுத்தருகிறார். இதனால் குடும்பம் பிரியாமல் உள்ளது. வயது மனிதர்களின் செயல் வேகத்தை குறைக்கும் என்றாலும், சனி தசை துவங்கியதும்தான் கணவர் மிகவும் சோம்பேறியாகிவிட்டதாக மனைவி கூறுகிறார். குடும்பத்தோடு சுற்றுலா சென்ற இடத்தில் கூட மனைவி குழந்தைகளோடு சூழலை ரசித்துவர, கணவர் காரிலேயே உறங்கியுள்ளார்.

கிரக பாதிப்புகள் தங்களது தசா-புக்திகளில்தான் தாக்கத்தை வெளிப்படுத்தும் என்பதால் சந்திரன் போன்று விரைந்து சுழலும் கிரக தசையும், சனி போன்று மெதுவாக சுழலும் கிரகமும் தசை நடத்தும் இருவர் இணைந்து செல்வது மிகவும் கடினமான ஒன்று. இளம் வயதில் வரும் இத்தகைய தசா-புக்திகளில் தாக்கத்தை அறிந்து பொருத்துவது சிறந்தது. சனி தசை நடக்கும் ஒருவருக்கு சுக்கிர தசை, புதன் தசை நடக்கும் ஒருவர் துணையாக அமைவதே விரும்பத்தக்கது. மேலே  நாம் ஆராய்ந்தவை போன்று இவ்விரு கிரக தசா-புக்திகளும் சந்திக்கும்போது ,தம்பதியர் இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்தால்தான் குடும்பம் பிரியாமல் இருக்கும். இல்லையேல் பிரிவினை ஏற்பட சாதியக்கூறுகள் அதிகம். சனி சகிப்புத்தன்மைக்கு உரிய கிரகம் என்பதால், பொதுவாக சனி தசை நடப்பவர்கள்தான் தனது துணைக்காக விட்டுக்கொடுப்பார்கள்.

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்,

அன்பன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501.